எளிமையான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறைக்கு இந்தியா மாறவேண்டும் : பன்னாட்டு நிதியம் வலியுறுத்தல்
Aug 10 2018 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எளிமையான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறைக்கு இந்தியா மாற வேண்டும் என்று, பன்னாட்டு நிதியம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து, ஆண்டறிக்கை ஒன்றை பன்னாட்டு நிதியம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், பல்வேறு வரிவிதிப்புகளுக்கு மாற்றாக, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்கும் விதமாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும், இந்த வரிவிதிப்பு முறை உள்ளது.
எனினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், விரிவிகிதம் அதிகமாகவும், பல அடுக்கு வரிகளுடன் சிக்கலான அமைப்பாகவும் உள்ளதாக, பன்னாட்டு நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், 5, 12, 18, 28 சதவீதம் என, 4 வகையான வரிகள் விதிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்தியுள்ள 115 நாடுகளில், 49 நாடுகளில் ஒற்றை வரிவிதிப்பு முறை அமலில் உள்ளது.
எனவே, இந்தியாவில் 4 அடுக்கு வரிவிதிப்பால், நிர்வாகப் பணிகளும், அதற்கான செலவுகளும் அதிகமாகின்றன. எனவே, தற்போதைய ஜி.எஸ்.டி. வருவாயைக் குறைக்காமல், நிர்வாக செலவுகளைக் குறைக்கும் வகையில், எளிமையான வரி விதிப்பு முறைக்கு இந்தியா மாற வேண்டும் என பன்னாட்டு நிதியம் கேட்டுக் கொண்டுள்ளது.