கனமழையால் ஸ்தம்பித்த கேரளா - மீட்புப் பணிகளுக்காக ராணுவம் வரவழைப்பு - கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை
Aug 10 2018 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிக்காக பேரிடர் மீட்பு குழு, ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு, மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியோரம் வசித்துவரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முழு கொள்ளளவை எட்டியுள்ள இடுக்கி அணை 26 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மாநிலத்தின் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.
கஞ்சிகோட் மற்றும் வாலயார் பகுதிக்கிடையே ரயில் தண்டவாளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், அவ்வழியாக ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்துவிழும் காட்சிகளும், சாலைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் காட்சிகளும் செல்ஃபோன் மற்றும் வலைதளங்கள் மூலம் வேகமாக பரவி வருகின்றன.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், நிலைமையை சமாளிக்க கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், ராணுவ உதவியை நாடியுள்ளார். இதனையடுத்து, மீட்புப் பணிக்காக பேரிடர் மீட்பு குழு, ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.