தென்மேற்குப் பருவமழை தீவிரத்தால், 7 மாநிலங்களில் இதுவரை 726 பேர் உயிரிழப்பு - கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
Aug 11 2018 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், 7 மாநிலங்களில் இதுவரை 726 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்து வருகிறது. இதனால் நட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏழு மாநிலங்களில் 726 பேர் பலியாகி உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 171 பேரும், மேற்குவங்கத்தில் 170 பேரும், மகாராஷ்டிராவில் 139 பேரும், குஜராத்தில் 52 பேரும், அசாமில் 44 பேரும், நாகலாந்தில் 8 பேரும் என மொத்தம் 726 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில், இரு மாதங்களாக, தென் மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. பலத்த மழை காரணமாக, கொச்சி, பாலக்காடு, இடுக்கி, மலப்புரம், திருவனந்தபும் உள்ளிட்ட மாவட்டங்கள், வெள்ளக் காடாக மாறியுள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. பாலக்காடு, இடுக்கி, கொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், மின்சாரம் தடைபட்டு உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலம்புழா அணையில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டதால், பாலக்காடு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இடுக்கி அணையின் அனைத்து மதகுகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பீதியில் உள்ளனர். இதனிடையே மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.