சுதந்திரதின விழாவை முன்னிட்டு, மின் விளக்குகளால் அலங்காரம் : கண்களைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் தேவலோகம்போல காட்சி அளிக்கும் டெல்லி செங்கோட்டை
Aug 11 2018 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுதந்திரதின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒளிவெள்ளத்தில் தேவலோகம்போல காட்சி அளிக்கிறது.
வரும் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இதனை முன்னிட்டு செங்கோட்டை 2,600 மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கண்களைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் அப்பகுதி தேவலோகம்போல காட்சி தருகிறது.
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த SWAT எனப்படும் ஆயுதங்களைக் கையாளும் திறன்கொண்ட, நாட்டின் முதலாவது மகளிர் அணியைச் சேர்ந்த 36 வீராங்கனைகள் டெல்லி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதனிடையே, அசாம் மாநில தலைநகரான கவுகாத்தி சந்தைகளில் துணி மற்றும் காகிதத்தால் தயாரிக்கப்பட்ட மூவர்ணக்கொடி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக்கால் ஆன தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதால், துணி மற்றும் காகிதத்தால் ஆன தேசியக்கொடி விற்பனைக்கு வந்துள்ளது.