கேரளாவில் இடுக்கி அணை திறப்பால் வெள்ளத்தில் மிதக்கும் கொச்சி : வெள்ள சேதப் பகுதிகளை முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சென்று ஆய்வு
Aug 11 2018 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் இடுக்கி அணை திறப்பால் கொச்சி வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ள சேதப் பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சென்று பார்வையிட்டார்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இடுக்கி, எடமலையார் உள்ளிட்ட அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், பெரியாறு வழியாக எர்ணாகுளம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. கொச்சி மாநகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. இடுக்கி, பதனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலாவுடன் பார்வையிட்டார். வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.