கேரளாவில் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கனமழை - கடும் பாதிப்புக்கு உள்ளான இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Aug 14 2018 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் சற்று ஓய்ந்திருந்த மழை மீண்டும் தொடங்கியுள்ளதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இடுக்கி மாவட்டத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பார்வையிட்டு, உடனடியாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நேற்று முன்தினம் மழை சற்று குறைந்ததால், மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இந்நிலையில், வடமேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் தென் கர்நாடகாவில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் தொய்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை நீடிப்பதால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சபரிமலை கோயிலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. தமிழ் மற்றும் மலையாள மாத பிறப்பையொட்டி சபரிமலை நடை திறப்பது வழக்கம். இதனால் அந்த நாளில் பக்தர்கள் வருவதும் வாடிக்கை. எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. கர்நாடகத்தின் தெற்கு உள்மாவட்டங்களிலும் தெலுங்கானா கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.