அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாகவும், இது குறித்து அனைத்து கட்சிகளின் கருத்தை கேட்க, கூடிய விரைவில் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனி தனியாக தேர்தல் நடத்துவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாவதாகவும், இந்த செலவை குறைக்க "ஒரு தேசம் ஒரு தேர்தல்" என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய பாரதிய ஜனதா அரசு வலியுறுத்தி வருகிறது. அதன் பரிந்துரையை ஏற்று சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மிகப்பெரிய ஆய்வை நடத்தியது. அதில், ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தினால் கூடுதலாக எத்தனை லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்ற கணக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து "ஒரு தேசம், ஒரு தேர்தல்" திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால் இந்த திட்டத்தை இதுவரை பெரும்பாலான கட்சிகள் ஏற்கவில்லை. இதனால் ஒரே தேர்தல் திட்டத்துக்கு இதுவரை ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதியுடன் முடிவதால், ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. ஆனால் இந்த தேர்தலுக்கு முன்னதாக வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பதவிக் காலம் முடிய உள்ள சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தல் முடிந்த அடுத்த 6 மாதங்களில் ஹரியானா, ஜார்க்கண்ட், மஹாராஷ்ட்ரா ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். இந்த செலவை குறைக்க நாடாளுமன்ற தேர்தலுடன் 11 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையமும் நாடாளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராகி வருவதாகவும், இது குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.