50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் - ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டால், புதிய அடையாளம் தேவையில்லை என விளக்கம்
Oct 18 2018 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆதார் அடிப்படையில் தனிப்பட்ட விவரங்கள் பெறப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொபைல் இணைப்புகள் பெறும்போது கே.ஒய்.சி எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆதார் இணைப்பின் மூலம் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகி விடுவதால், காகித ஆவணங்களை அழித்துவிடலாம் என கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே, மொபைல் எண்ணுடன் வாடிக்கையாளர்கள், ஆதாரை இணைத்த நிலையில், அதற்கு முன்னர் விவரங்களை நிரப்பி வழங்கிய, கேஒய்சி ஆவணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அழிக்கப்பட்டிருக்கக்கூடும் என தெரிகிறது.
தனிநபர்களின் தனித்துவ அடையாளத்தை சான்று ஆவணங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்தது. எனவே, ஆதார் மூலம் கே.ஒய்.சி விவரங்கள் பெறப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகளுக்கு, புதிதாக வாடிக்கையாளர் விவரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் நிலை உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக தொலைத்தொடர்பு துறை மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், 50 கோடி மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் என்ற தகவலை மறுத்துள்ளதுடன், ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டால், புதிய அடையாளம் கேட்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளன.