சபரி மலை பதற்றம் காரணமாக செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி மறுப்பு - சன்னிதானத்தை மூடுமாறு கேரள பந்தள மன்னர் குடும்பத்தினர் உத்தரவிட்டதால் பரபரப்பு
Oct 19 2018 10:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரி மலை சன்னிதானத்தில் செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, நேற்று முதன்முறையாக நடை திறக்கப்பட்டதுமுதல், அங்கு பதற்றம் இருந்து வருகிறது. நேற்று ஏராளமான பெண்கள் சன்னிதானத்தை நோக்கி சென்றபோது, போராட்டக்காரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இன்று காலை ஆந்திராவைச் சேர்ந்த கவிதா என்ற பெண் பத்திரிகையாளரும், இருமுடி தாங்கிய மற்றொரு பெண் பக்தரும் சன்னிதானத்தை நெருங்கி சென்றனர். இதனால் அங்கு 2ம் நாளாக இன்றும் பதற்றம் நீடிக்கிறது. எனவே செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், சன்னிதானத்தை நெருங்கி இருக்கும் 2 பெண்களை திருப்பி அனுப்பவும் கேரள அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, போராட்டக்காரர்களுடன் கேரள ஐ.ஜி. திரு. ஸ்ரீஜித் தலைமயிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், சன்னிதானத்திற்குள் பெண்கள் நுழைய முயன்றால் அதனை மூடுமாறு கேரள பந்தள மன்னர் குடும்பத்தினர், மேல் சாந்திக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.