டெல்லியில் பெட்ரோல் பங்குகள் உரிமையாளர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தம் : டெல்லி அரசைக் கண்டித்து கால் டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வாகனச்சேவை பாதிப்பு
Oct 22 2018 11:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாட் வரியை குறைக்க மறுக்கும் டெல்லி அரசைக் கண்டித்து, இன்று பெட்ரோல் பங்குகள் 24 மணிநேர வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை, அண்டை மாநிலங்கள் போல் குறைக்க வேண்டும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. இதனால், பங்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்புவதை வெளி வாகனங்கள் தவிர்த்ததால், விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.
எனவே, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை டெல்லி அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, பெட்ரோல் பங்குகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், சுமார் 400 பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் பங்குகள் மூடப்பட்டுள்ளன.
இதேபோல், ஆட்டோ, டாக்சி போன்ற தனியார் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டிருப்போரை பாதிக்கும், டெல்லி அரசின் கொள்கைகளை கண்டித்து, சன்யுக்த் சங்கர்ஷ் சமிதி என்ற தொழிலாளர்கள் அமைப்பு, இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், டெல்லியில் கனரக வாகனச்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.