நாடு முழுவதும் பட்டாசு விற்கவும், தயாரிக்கவும் தடையில்லை - ஆன்லைனில் பட்டாசு விற்பதற்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்
Oct 23 2018 3:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரம் பட்டாசுகளை ஆன்லைனில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசு காரணமாக, டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குறிப்பிட்ட தொலைவிற்கு பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த தடையை நாடு முழுவதும் அமல்படுத்தக்கோரி பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.
அதே சமயம் பட்டாசு உற்பத்தியை முறைப்படுத்த வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிகளவிலான சத்தம் மற்றும் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்கீகாரம் இல்லாத கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது என்றும், ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிக காற்று மாசு காரணமாக டெல்லியில் மட்டும், குறிப்பிட்ட சில பட்டாசுகளை வெடிக்கவும், பட்டாசுகள் வெடிக்கும் நேரத்தை குறைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.