அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற மத்திய அரசு யோசனை - விரைவில் சட்டம் கொண்டுவரவுள்ளதாகவும் தகவல்
Dec 6 2018 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
"எனது ஆதார், எனது அடையாளம்" என்ற முத்திரையுடன் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மூலம் மத்திய, மாநில அரசுகள் தங்கள் நலத்திட்டங்களையும், உதவிகளையும் மேற்கொண்டன. இதனிடையே ஆதார் தகவல்கள் அம்பலமாவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் அதிருப்தியும் ஏற்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது.
வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவை இல்லை என்று கூறப்பட்டது. அதுபோல சிம் கார்டுகள் வாங்க ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்றும் அறிவித்தது. இதையடுத்து ஆதார் ஆணையம் சில பரிந்துரைகளை கொண்டு வந்தது. அந்த பரிந்துரைகள் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. "அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை முக்கிய சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்" என்று சட்ட அமைச்சகம் திருத்தம் செய்தது.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. அந்த சட்ட திருத்தத்தில், ஆதார் கட்டாயம் இல்லை என உறுதிப்படுத்தப்படலாம் என்றும், அதேசமயம், பான் எண் இல்லாதவர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.