நாடாளுமன்ற தேர்தலுக்கும் தொடருமா? இந்த தேர்தல் முடிவுகள்- பா.ஜ.க வின் கொள்கைகைகள்- திட்டங்களுக்கு எதிராக வாக்களித்தார்களா மக்கள் ?
Dec 12 2018 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் முதல் பெரும் தோல்வியாக அமைந்துவிட்டது. திரு. மோடியின் பிரசாரம் மட்டுமே வெற்றியை பெற்று தந்துவிடும் என்ற பாரதிய ஜனதா கட்சின் வியூகத்தை வாக்காளர்கள் தகர்த்துவிட்டனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதலே, பிரதமர் திரு. நரேந்திர மோடியை முன்னிலை படுத்தியே வியூகம் அமைத்து பாரதிய ஜனதா கட்சி பிரச்சாரம் செய்து வந்தது. நாடாளுமன்ற தேர்தல்களில் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் பிம்பம் மேலும் வலுவாக கட்டப்பட்டது. அடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் உத்திரபிரதேசம், மகாராஷ்டிரம், பிகார், அஸ்ஸாம், கோவா, ஹரியானா, குஜராத், ஹிமாச்சலபிரதேசம், காஷ்மீர் வரை எல்லா தேர்தல்களிலும் பிரதமர் மோடியின் பிரசாரமே வெற்றியை தேடித்தந்ததாக பாரதிய ஜனதா கட்சியினர் பெருமைப்பட்டனர். திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தியது வரை பிரதமர் மோடியின் பிரசார வலிமை மீது அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையும். ஜி.எஸ்.டி.வரி விதிப்பும் மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை எற்படுத்தியிருந்த நிலையிலும் பிரதமர் திரு. மோடியின் பிரசாரம் பா.ஜ.க வுக்கு இந்த தேர்தல்களில் வெற்றியை பெற்றுத் தந்தது. இந்த பாதிப்புகள் விரைவில் போக்கப்படும் என்றும் மக்களின் வாழ்வு வளம் பெரும் என்றும் திரு.மோடி பிரசாரம் செய்ததை மக்கள் உண்மையென்றே நம்பினர். எனினும் 5 ஆண்டுகால மத்திய ஆட்சியால் ஏற்பட்ட நீண்டகால பாதிப்புகளை திரு.மோடியின் அரசு இதுவரை சரிசெய்ய முடியாமல் இருப்பதை மக்கள் இப்போது உணர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி முதல், எதிர்கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொண்ட பிரசாரம் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. தேர்தல் நடை பெற்ற 5 மாநிலங்களிலும் பா.ஜ.க அறிவித்த பல இலவச திட்டங்களையும், விவசாயிகளுக்கான சலுகைகளையும் மக்கள் நம்பத்தயாராக இல்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடியின் முதல் பெரும் தோல்வியாகவே அமைந்துவிட்டது.