நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள்: அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
Jan 11 2019 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது.
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் நிறைவடைய உள்ளது. எனவே 17-வது மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பள்ளி பொதுத் தேர்வுகள், பண்டிகைகள், விழாக்கள் போன்றவற்றால் இடையூறின்றி பல கட்டங்களாக தேர்தலை நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதுதொடர்பான பணிகள் நிறைவடைந்ததால், தேர்தல் தேதியை, வரும் மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி, மே மாதம் இரண்டாவது வாரத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தேர்தல் ஆணையம் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது.