தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் ஒப்புதல் : மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரம்
Feb 5 2019 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கிகளில் கடன்பெற்று லண்டனுக்கு தப்பியோடிய விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா, கடந்த 2016 மார்ச் 2ம் தேதி இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார். லண்டனில் பதுங்கியுள்ள அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் லண்டன் நீதிமன்றத்தில் நடந்தன. லண்டனில் இருந்து மல்லையாவை நாடு கடத்த இந்திய அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்தது. ஓராண்டு விசாரணைக்கு பிறகு, கடந்த டிசம்பர் 10ம் தேதி இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி, விஜய்மல்லையாவை நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து அமைச்சர் சாஜித் ஜாவித்துக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்வதாக மல்லையா அறிவித்திருந்தார். இதற்கிடையே, நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு துரிதப்படுத்தி வந்தது. இந்நிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.