புதுச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் விடிய விடிய தர்ணா போராட்டம் - துணை ராணுவப் படை வரவழைப்பு
Feb 14 2019 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக, முதலமைச்சர் திரு.நாராயணசாமி தலைமையிலான தர்ணா போராட்டம் இரவும் நீடித்தது. துணை ராணுவமே வந்தாலும், தங்களது அறவழிப் போராட்டம் தொடரும் என அமைச்சர் திரு. நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதால், அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வந்தது. விலையில்லா பொங்கல் பொருட்களை வழங்க அனுமதி மறுத்தது உட்பட அரசின் பல முடிவுகளுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டை போட்டு வந்தார். இந்நிலையில், கட்டாயமாக ஹெல்மெட் அணிவதை படிப்படியாக நிறைவேற்றப்படும் என திரு.நாராயணசாமி தெரிவித்திருந்த நிலையில், கடந்த 11ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக டி.ஜி.பி. மூலம் கிரண்பேடி அறிவிக்க வைத்தார். இதனால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகை முன்பு திரு.நாராயணசாமி தலைமையில், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் இரவும் நீடித்தது.
இதனிடையே, தனது மாளிகையை முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர்களும் சுற்றி வளைத்துள்ளதாகவும், தன்னைச் செயல்படவிடாமல் தடுத்துள்ளதாகவும் கிரண்பேடி வாட்ஸ் அப் மூலம் செய்தி வெளியிட்டார். மேலும், நிலைமையை சமாளிக்க, துணை ராணுவப் படை வரவழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திரு. நமச்சிவாயம், துணை ராணுவமே வந்தாலும், அறவழிப் போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ளார்.
துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய பிரமுகர்கள் தவிர கட்சித் தொண்டர்களை வெளியேற்ற டிஜிபி சுந்தரி நந்தா உத்தரவிட்டதை தொடர்ந்து தொண்டர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.