ரஃபேல் போர் விமான கொள்முதல் முறைகேடு குறித்து புதிய ஆதாரம் - பிரபல ஆங்கில நாளேடு வெளியீடு
Apr 9 2019 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரதிய ஜனதா அரசு மேற்கொண்ட ரஃபேல் போர் விமான கொள்முதல் பேரத்தில் முறைகேடு நடைபெற்றதற்கான புதிய ஆதாரத்தை பிரபல ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது.
ஃபிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து, ரஃபேல் போர் விமானங்கள் வாங்க, பிரதமர் திரு.மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பது உறுதி என தொடர்ந்து செய்தி வெளியிட்டுவரும் பிரபல ஆங்கில நாளிதழ், தற்போது, மேலும் சில புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரஃபேல் கொள்முதலுக்கான ஒப்பந்தத்தில், டசால்ட், MBDA ஆகிய ஃபிரான்ஸ் நிறுவனங்களுக்கு, உள்ளூர் ஒப்பந்ததாரர் நியமனத்திற்கு எப்போதும் இல்லாத அளவிற்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புத்துறைக்கான தளவாட கொள்முதல் விதிமுறையில் 2 முக்கிய ஷரத்துகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நாளிதழ் புகார் தெரிவித்துள்ளது. இந்திய கொள்முதல் பேரக் குழுவின் முயற்சியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நீர்த்துப்போக செய்தார் என்றும் அந்த நாளேடு குற்றம் சாட்டியுள்ளது.