ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என பா.ஜ.க. ஒருபோதும் கூறியதில்லை - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பல்டி
Apr 9 2019 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டு மக்கள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி குறித்து, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் வெவ்வேறு விதமாக கருத்து தெரிவித்துள்ளது, மக்களை குழப்பமடைய செய்துள்ளது.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு திரு. ராஜ்நாத் சிங் இன்று அளித்த பேட்டியில், பல மாநிலங்களில், தற்போது நடக்கும் வருமான வரி சோதனைகளுக்கும், மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறினார். தன்னாட்சி முகமைகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது என்றும் தெரிவித்தார். பாகிஸ்தானின் பாலகோட்டில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து பேசிய அவர், ஆதாரம் பற்றி கேட்க கூடாது என்று குறிப்பிட்டார்.
2014-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது கருப்புப் பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றே பாரதிய ஜனதா உறுதி அளித்ததாகவும், மக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என ஒருபோதும் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சருமான திரு. நிதின் கட்கரி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கடந்த மக்களவை தேர்தலில், வெற்றி பெறுவோம் என்று தெரியாமல், 15 லட்சம் ரூபாய் மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என வாக்குறுதியை அள்ளி வீசியதாக தெரிவித்தார்.
பாரதிய ஜனதா மூத்த தலைவர்களின் இதுபோன்ற முரண்பட்ட கருத்துகள் மக்களை குழப்பமடைய செய்துள்ளன.