பாரதிய ஜனதா கட்சியினர் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் பதவி நீக்கம் - முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் அதிரடி நடவடிக்கை
May 21 2019 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரதிய ஜனதா கட்சியினர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பார் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் திரு. யோகிஆதித்யாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.
கூட்டணி கட்சியான பா.ஜ.க-வுக்கு எதிராக அடிக்கடி கருத்துகள் தெரிவித்து வந்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் பல தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தியதோடு, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களுக்கும் ராஜ்பார் ஆதரவு தெரிவித்திருந்தார். மேலும், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இதற்கிடையே சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராஜ்பார், பா.ஜ.க. உறுப்பினர்களை 'ஷு'வால் அடிக்க வேண்டும் எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் ராஜ்பாரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படி ஆளுநர் திரு.ராம் நாயக்குக்கு முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் கடிதம் அனுப்பினார். அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், திரு. ஓம் பிரகாஷ் ராஜ்பாரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.