வாக்கு இயந்திரத்தில் செய்த தில்லுமுல்லு தான் எப்போதும் இல்லாத தோல்விக்கு காரணம் - மாயாவதி குற்றச்சாட்டு
May 24 2019 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி, பெரும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், எப்போதும் இல்லாத இந்த தோல்விக்கு, வாக்கு இயந்திரத்தில் செய்த தில்லுமுல்லு தான் காரணம் என செல்வி மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் சவாலாக விளங்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
மொத்தம் உள்ள 80 தொகுதிகளில், பகுஜன் சமாஜ்கட்சி 9 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களையும் மட்டுமே வென்றன. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய செல்வி மாயாவதி, இந்தத் தோல்வி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியாக, தான் கருதுவதாகத் தெரிவித்தார். பாரதிய ஜனதாவின் வெற்றியை மக்களின் உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் எதிரான வெற்றியாகவே பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தேர்தலில், வாக்கு இயந்திரத்தில் செய்த தில்லுமுல்லு தான் தங்கள் தோல்விக்குக் காரணம் என செல்வி மாயாவதி குற்றம் சாட்டினார். நாடு முழுவதும் இதுபோலத்தான் நடைபெற்றுள்ளதாகவும், மக்களின் நம்பிக்கையை மின்னணு வாக்கு இயந்திரம் மாயமாக்கவிட்டதாகவும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.