யோகி ஆதித்யநாத் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் சிறை வைக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் - உடனடியாக விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Jun 12 2019 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யா நாத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பெண் ஒருவர் கருத்து தெரிவித்தார். அதன் வீடியோ காட்சியை நொய்டாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியா டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். இதனை தொடர்ந்து முதல்வர் யோகி குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக பிரசாந்த்தை கைது செய்த உத்தரப்பிரதேச போலீசார், லக்னோ சிறையில் அடைத்தனர். இவ்விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, பத்திரிக்கையாளர் பிரசாந்த் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. எதன் அடிப்படையில், பத்திரிக்கையாளரை கைது செய்தீர்கள் என சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒவ்வொரு தனி நபருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளதாக கூறினர். மேலும், பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டு, ஜாமீன் வழங்கினர்.