காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் வரும் 25-ம் தேதி கூடுகிறது - தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காத கர்நாடகாவுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தகவல்
Jun 14 2019 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் வருகிற 25-ம் தேதி கூடுகிறது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்றாத நிலையில், மீண்டும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இந்த இரு அமைப்புகளுக்கும் தங்கள் தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்துள்ளன. இதுவரை 3 முறை காவிரி மேலாண்மை ஆணையம் கூடிய நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தின்போது குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு ஜூன் மாதம் ஒன்பது புள்ளி இரண்டு டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் இந்த உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் தண்ணீர் திறக்கப்படாதது குறித்து விவாதிக்க வரும் 25-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கர்நாடகாவுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என தெரிகிறது.