போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து பணிக்கு திரும்பிய மருத்துவர்கள் - பாதுகாப்பு கோரி அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Jun 19 2019 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, எவ்வித உத்தரவும் பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
பணிநேரத்தின்போது பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து, மேற்குவங்க மருத்துவர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தம் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நேற்று முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர்.
இதனிடையே, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில், நேற்று, மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பாதுகாப்புப் பணிக்கு, காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கும், மேற்கு வங்க அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, விடுமுறை கால அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், எவ்வித உத்தரவும் பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். விடுமுறைக்கு பின்னர், உரிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.