அரசு பள்ளி பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு எந்திரங்களில் தமிழ் மொழி திடீர் நீக்கம் - வலுக்கட்டாயமாக ஹிந்தி மொழி திணிக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
Jul 19 2019 11:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு பள்ளிகளில் உள்ள வருகை பதிவு முறை எந்திரத்தில், தமிழை நீக்கிவிட்டு இந்தி சேர்க்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கு வந்தவுடன் தங்களது வருகையை பதிவு செய்ய, பயோ மெட்ரிக் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டிருக்கும் எந்திரத்தில், தங்களது கைரேகையை ஆசிரியர்கள் பதிவு செய்யவேண்டும். இதேபோல் பள்ளி நேரம் முடிவடைந்து வெளியே செல்லும்போதும், ஆசிரியர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்வதுண்டு. இதுவரை, பதிவு எந்திரத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது தமிழ் நீக்கப்பட்டு, இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும், தமிழ் எழுத்துகள் இடம் பெற செய்ய வேண்டும் என்றும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே தபால்துறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்படுவதற்கு, மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அனைத்து மாநில மொழிகளிலும் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.