உன்னாவ் சிறுமி கார் விபத்து தொடர்பான வழக்கு - சிபிஐ கோரிக்கைபடி இரண்டுவாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
Aug 19 2019 1:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் கார், விபத்துக்குள்ளானது தொடர்பான வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க, சி.பி.ஐ.க்கு மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமியும், அவரது வழக்கறிஞரும் சென்ற கார் மீது லாரி மோதிய விபத்து குறித்து, சிபிஐ, விசாரணை நடத்தி வருகிறது. விபத்தில், சிறுமியும், அவரது வழக்கறிஞரும் படுகாயமடைந்தனர். இருவரில், வழக்கறிஞரின் உடல்நிலை சற்று முன்னேறியுள்ளது. சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சிபிஐ-க்கு, உச்சநீதிமன்றம், கடந்த 1ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், மேலும் கால அவகாசம் வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சிபிஐக்கு மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் வழக்கறிஞருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரபிரதேச அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.