ஜம்மு-காஷ்மீரில், அசம்பாவிதங்களை தவிர்க்கவே தொலைபேசி சேவைகள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன - மாநில ஆளுநர் விளக்கம்
Aug 26 2019 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரில், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே, தொலைபேசி சேவைகள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்வதாக அம்மாநில ஆளுநர் திரு. சத்யபால் மாலிக் விளக்கம் அளித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால், அங்கு வன்முறை போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணைய வசதி, தொலைபேசி உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டன. தொலைபேசி இணைப்புகள், 2ஜி இணைய சேவைகள் அண்மையில் செயல்படத் தொடங்கின. ஆனால் முழுமையாக அனைத்து பகுதிகளிலும் தொலைபேசி சேவைகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் திரு. சத்யபால் மாலிக், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, இரண்டுவார காலம் ஆகியும், இதுவரை அசம்பாவிதங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என கூறினார். அதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, தொலைபேசி சேவைகள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்வதாக அவர் அப்போது விளக்கம் அளித்தார். சந்தைகள் மூடப்படிருந்தாலும், காஷ்மீரில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார்.