வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா திடீர் கைது - மத்திய அரசு நடவடிக்கையால் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி
Sep 17 2019 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் திரு. பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான இந்த நடவடிக்கை உள்ளூர் மக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். முன்னாள் முதலமைச்சர்கள் திரு.ஃபரூக் அப்துல்லா, திருமதி மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்டோருக்கு வெளியே வருவதற்கும், பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் ஃபரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்தக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு.வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசுக்கும், ஜம்மு காஷ்மீர் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வரும் 30ம் தேதிக்குள் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், நேற்று இரவு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் திரு. பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். முதல்கட்டமாக அவரை 12 நாள் சிறைவைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை ஒருவரை எந்தவித விசாரணையும் இன்றி சிறைவைக்க இந்த சட்டம் வழி செய்கிறது. அவரது வீடே துணை சிறையாக மாற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காஷ்மீர் மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.