ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அரசு மேலும் நெருக்கடி - அமராவாதியில் தங்கியிருக்கும் வீட்டை 7 நாட்களில் இடித்துத்தள்ள உத்தரவு
Sep 22 2019 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான திரு.சந்திரபாபுநாயுடு அமராவதி நகரில் தங்கியுள்ள வீட்டை இடிக்க, திரு.ஜெகன்மோகன் தலைமையிலான அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர பிரதேச தலைநகர் மேம்பாட்டு வாரியம் அனுப்பியுள்ள நோட்டீசில், 7 நாட்களுக்குள் வீட்டை இடிக்க வேண்டும் என்றும், தவறினால், அரசு சார்பில் இடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு தங்கியுள்ள வீடு, லிங்கமனேனி ரமேஷ் என்பவருக்கு சொந்தமானது. இந்த வீடு, நதிகள் பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதனை இடிக்க கடந்த மாதம் ஆந்திர தலைநகர் மேம்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு, ரமேஷ் அளித்த பதிலில், வீடு கட்ட முறையாக அனுமதி வாங்கப்பட்டுள்ளதாகவும், திரு.ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது, உண்டவள்ளி கிராம பஞ்சாயத்து அனுமதி கொடுத்ததாகவும் கூறியிருந்தார். ஆனால், இந்த பதிலில் திருப்தி அடையாத அதிகாரிகள், கிராம பஞ்சாயத்து கொடுத்த அனுமதியை ஏற்க முடியாது எனக்கூறிவிட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேச கட்சி, திட்டமிட்டே திரு.ஜெகன்மோகன் அரசு சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளது. ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றது முதலே அவருக்கும், நாயுடுவுக்கும் இடையிலான மோதல் போக்கு அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.