விண்ணை எட்டும் வெங்காயத்தின் விலை -கையிருப்பில் உள்ள வெங்காயத்தை, மாநிலங்களுக்கு வழங்கி விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
Sep 23 2019 2:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கையிருப்பில் உள்ள வெங்காயத்தை, மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இம்மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்ததால், வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. கிடங்குகளில் உள்ள வெங்காயம் மட்டுமே சந்தைக்கு வந்ததால், வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.
நுகர்வோர் அமைச்சக புள்ளி விவரப்படி, கடந்த வாரம் முதலே நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் சில்லறை விற்பனையில் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயம், கடந்த சில நாட்களில் கிடுகிடு என உயர்ந்து, தற்போது 70 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்று சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் டெல்லியில் 65 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 56 ரூபாய்க்கும், மும்பை மற்றும் பெங்களூருவில் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. விலையை கட்டுப்படுத்த, இருப்பில் உள்ள 56 ஆயிரம் டன் வெங்காயத்தை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாநிலங்கள் தங்களது தேவைக்கு ஏற்றார் போல் வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசின் இருப்பில் இருந்து இதுவரை 16 ஆயிரம் டன் வெங்காயத்தை மாநிலங்கள் எடுத்துக் கொண்டுள்ளன.