கேரள மாநிலம் மரடு பகுதியில் விதிமீறி அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்ட வழக்கு - இடிப்பதற்கு காலஅவகாசம் கோரிய கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
Sep 23 2019 6:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம் மரடு பகுதியில் விதிமீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க கால அவகாசம் கோரிய கேரள அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மரடு பகுதியில் கடல்சார் கட்டிட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை இடிக்கக்கோரி கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படிகடந்த 20 ஆம் தேதிக்குள் கட்டிடத்தை இடித்து அதன் அறிக்கையுடன் கேரள மாநில தலைமைச்செயலாளர் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான கேரள தலைமைச்செயலாளர் டாம் ஜோஸ், கட்டிடத்தை இடிக்க மூன்று மாதம் கால அவகாசம் கோரினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி அருண் மிஸ்ரா, கட்டிடத்தை இடிக்க கால அவகாசம் கோருவது அதிர்ச்சி அளிப்பதாகவும், இயற்கை பேரிடர்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் யார் பதிலளிப்பது என கேள்வி எழுப்பினர். மேலும், கேரள மாநிலத்தில் இதேபோன்று எத்தனை அடுக்குமாடி கட்டிடங்கள் கடல்சார் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள 350 குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கேரள எதிர்கட்சியினரும் இணைந்ததால் கட்டிடத்தை இடிப்பதில் கேரள அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.