ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு
Nov 13 2019 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை, வரும் 22ம் தேதி வரை நீட்டித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் திரு.இன்பதுரை வெற்றிபெற்றதற்கு எதிராக, அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வைச் சேர்ந்த திரு.அப்பாவு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறு வாக்கு எண்ணிக்கை அண்மையில் நடைபெற்றது.
ஆனால், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.இன்பதுரை, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை வெளியிட தடைவிதிக்கப்பட்டது. மேலும், மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என திரு.அப்பாவு வைத்த கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை, வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.