சபரிமலைக்கு சென்ற 10 பெண்கள் திருப்பி அனுப்பி வைப்பு - பம்பையில் பெண்களை தடுத்து நிறுத்தி கேரளா போலீசார் நடவடிக்கை
Nov 16 2019 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலைக்கு சென்ற ஆந்திராவைச் சேர்ந்த, 10 பெண்களை தடுத்து நிறுத்திய கேரளா போலீசார், அவர்களை திருப்பி அனுப்பினர்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்கள், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டன. சபரிமலை வழக்கில் முந்தைய தீர்ப்பிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இதனால், இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு சபரிமலைக்கு செல்வோம் என பெண்ணிய அமைப்பினர் சிலர் தெரிவித்தனர். சபரி மலைக்கு செல்ல 50-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், தீர்ப்பு வரும் வரை சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான, பெண்களை அனுமதிக்க முடியாது என்றும், அதையும் மீறி கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்றால், உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்திருந்தது. மேலும், சபரிமலைக்கு வரும் 10 முதல் 50 வயது வரையிலான, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் தேவசம் போர்டு தெரிவித்தது.
இந்த நிலையில், இன்று ஆந்திராவைச் சேர்ந்த 10 பெண்கள் சபரிமலைக்கு சென்றனர். அவர்களை பம்பையில் தடுத்து நிறுத்திய போலீசார், சபரிமலை நம்பிக்கை குறித்து எடுத்துக்கூறி, அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.