ஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
Dec 7 2019 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹைதராபாத் என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த, தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு தெலங்கானா விரைந்துள்ள நிலையில், என்கவுண்டரில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா பெண் மருத்துவரை, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற குற்றவாளிகள் 4 பேரும் நேற்று அதிகாலை என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டனர். சைபராபாத் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டர் குறித்து, காவல் ஆணையர் திரு. வி.சி.சஜ்ஜனார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்த, சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டபோது, காவலர்களின் துப்பாக்கிகளை பறித்து குற்றவாளிகள் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அப்போது அவர்கள், சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து, எந்த ஆணையத்திலும் விளக்கம் அளிக்க தயார் என்றும் சஜ்ஜனார் கூறினார்.
இதனிடையே, என்கவுண்டரில் ஈடுபட்ட காவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் இருவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த, தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு ஹைதராபாத் விரைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தவுள்ள அந்த குழு, சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளிகளின் உடல்களை மருத்துவமனைக்கு சென்று பார்வையிடவும் திட்டமிட்டுள்ளது.