பால் தாக்கரேவுக்கு நினைவிடம் கட்ட ஆயிரம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாக வெளியான தகவல் - தேவேந்திர பட்னவிசின் மனைவி அம்ருதா பட்னவிஸ், சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி டுவிட்டரில் வார்த்தை மோதல்
Dec 9 2019 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிசின் மனைவி திருமதி. அம்ருதா பட்னவிசும், சிவசேனா கட்சியைச் சேர்ந்த திருமதி. பிரியங்கா சதுர்வேதியும், சமூக வலைதளமான டுவிட்டரில், வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
மஹாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில், ஆயிரம் மரங்களை வெட்டி, சிவசேனா கட்சி நிறுவனர் பால் தாக்கரேவுக்கு நினைவிடம் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து, பா.ஜ.க.,வைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிசின் மனைவி, திருமதி. அம்ருதா பட்னவிஸ், டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், சுற்றுச்சூழலில் அக்கறை உள்ளவர்களாக, சிவசேனா கட்சியினர் தங்களை காட்டிக் கொண்டனர் என்றும், தற்போது, அவுரங்காபாத்தில், பால் தாக்கரே நினைவிடத்துக்காக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளன என்றும், சிவசேனா கட்சியினர், இரட்டைவேடம் போடுபவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த சிவசேனா கட்சியைச் சேர்ந்த திருமதி. பிரியங்கா சதுர்வேதி, பால் தாக்கரே நினைவிடத்திற்காக மரங்கள் வெட்டப்பட மாட்டாது என்பதை மேயர் உறுதிப்படுத்தி உள்ளார் என்றும், கட்டாய பொய் சொல்வது, மிகப்பெரிய நோய் என்றும், அதிலிருந்து விரைவில் குணமடையுங்கள் என்றும் கூறினார்.