பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்கு விசாரணைகளை, இரண்டே மாதங்களில் முடிக்க வேண்டும் - மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதுகிறார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
Dec 9 2019 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்கு விசாரணைகளை, இரண்டே மாதங்களில் முடிக்கும்படி, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதவுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை, நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இந்நிலையில், போக்சோ வழக்குகளை விரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் வகையில், நாடு முழுவதும் ஆயிரத்து 23 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், நிலுவையில் உள்ள பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிக்க, விரைவு நீதிமன்றங்களை அமைக்கும்படி, அனைத்து மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை வலியுறுத்த உள்ளதாகக் கூறினார்.
நீதிமன்றத்துக்கு வரும் இத்தகைய வழக்குகள், 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், போக்சோ வழக்குகளின் விசாரணையை, இரண்டே மாதங்களில் முடிக்கும்படி, அனைத்து மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதவுள்ளதாக, அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.