கர்நாடக மாநிலத்தில், 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று எண்ணப்பட உள்ளன. குறைந்தபட்சம் 6 தொகுதிகளில், பா.ஜ.க., வெற்றி பெற்றால் மட்டுமே, முதலமைச்சர் திரு. எடியூரப்பா ஆட்சியை தக்கவைக்க முடியும் என்பதால், தேர்தல் முடிவுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. குமாரசாமி தலைமையிலான, மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக, அக்கட்சிகளைச் சேர்ந்த 17 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வாக்களித்தனர். இதனால், திரு. குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, 17 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இதன் பின்னர், கர்நாடக மாநில முதலமைச்சராக, பா.ஜ.க.,வைச் சேர்ந்த திரு. எடியூரப்பா பதவியேற்றார்.
இந்நிலையில், தகுதி நீக்கத்தை எதிர்த்து, 17 எம்.எல்.ஏ.,க்களும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், தகுதி நீக்கம் செல்லும் என்றும், இடைத்தேர்தலில் 17 எம்.எல்.ஏ.,க்கள் போட்டியிட தடையில்லை என்றும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநில சட்டப்பேரவையில், 17 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 17 தொகுதிகளில், பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ராய்ச்சூரில் உள்ள மஸ்கி தொகுதியை தவிர, மற்ற 15 தொகுதிகளுக்கு, கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், பா.ஜ.க., - காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், 15 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும், 11 மையங்களில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில், குறைந்தது 6 தொகுதிகளிலாவது பா.ஜ.க., வெற்றி பெற்றால் மட்டுமே, திரு. எடியூரப்பா தலைமையிலான அரசு, கர்நாடக மாநிலத்தில் நிலைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, 9 முதல் 12 தொகுதிகளை பா.ஜ.க., கைப்பற்றும் எனக் கூறப்படுகிறது.