குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் - எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
Dec 9 2019 1:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், அஃப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில், மதரீதியிலான அடக்குமுறையைத் தொடர்ந்து, இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின்படி, அண்டை நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்போருக்கு குடியுரிமை வழங்கலாம். இந்நிலையில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில், குறைந்தது 7 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்க திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, சிறுபான்மையினருக்கு எதிரானது என்றும், மக்களை, மதரீதியாக பிளவுபடுத்தும் என்றும், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டமும் நடத்தின. மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு நாடாளுமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை என்றும், சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும் அமித்ஷா விளக்கம் அளித்தார். மேலும், குடியுரிமை சட்டத்திருத்தம், மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவித்தார்.