காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை - கர்நாடக இடைத்தேர்தல் முடிவை மேற்கோள்காட்டி பிரதமர் பேச்சு
Dec 9 2019 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும், குறுக்கு வழியில் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை என்பதையே கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக பிரதமர் திரு. மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு, அம்மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்நிலையில் இன்று ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் திரு. மோடி, கர்நாடக இடைத்தேர்தல் வெற்றிக்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், பாரதிய ஜனதா ஆட்சியமைக்கவே மக்கள் தீர்ப்பளித்ததாகவும், காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்ததாகவும், ஆனால் அந்த ஆட்சி நிலைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும், பின்வாசல் வழியாக, மீண்டும் ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை என்றும், பா.ஜ.க., மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையே இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.