குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் - அரசியல் சாட்டத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
Dec 9 2019 7:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை, உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த சட்டம் அரசியல் சாட்டத்திற்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955-ல் திருத்தங்கள் செய்து, புதிதாக சட்டமசோதாவை உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள், பங்களாதேஷ், பாகிஸ்தான், அஃப்கனிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக வந்து குடியேறிய முஸ்லிம்கள் அல்லாத அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க இந்தப் புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது. இந்தியாவில் முதல்முறையாக, மத அடிப்படையில் குடியுரிமை வழங்க வகை செய்யும் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிள் அறிமுக நிலையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்திய அரசியல் சட்டத்தின் பல்வேறு அம்சங்களை சீர்குலைக்கும் வகையில் இந்த சட்டத்திருத்தம் அமைந்திருப்பதாக, எதிர்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற அரசியல் அமைப்பின் அடிப்படை கோட்பாட்டை மீறியுள்ள இந்த சட்டம் குறிப்பிட்ட சில மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்கி, வேறுசில மதத்தினருக்கு குடியுரிமை மறுக்கிறது,இது மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தும் செயல் என காங்கிரஸ் எம்.பி., திரு. சசிதரூர், மக்களவையில் நோட்டீஸ் அளித்தார். இந்த மசோதா, இந்தியாவை, இந்துத்துவா நாடாக மாற்றிவிடும் என்றும் திரு. சசிதரூர் எச்சரித்தார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த திரு. அமித்ஷா, இந்த மசோதா சிறுபான்மை மக்களுக்கு எதிரானதல்ல என்றும், ஊடுருவல்காரர்களுக்கு மட்டுமே எதிரானது என்றும் தெரிவித்தார்.