பாலியல் வன்கொடுமை செய்து நிர்பயா கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை - தூக்கு கயிறுகளை தயாரிக்க பீகார் சிறைச்சாலைக்கு உத்தரவு
Dec 9 2019 9:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், தூக்கு கயிறுகளை தயாரிக்க பீகார் சிறைச்சாலைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி, மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், 6 பேரில் 5 பேர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவன், சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டான். 5 பேரில், முக்கிய குற்றவாளியான ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
பவன்குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்ஷய் தாகூர் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இவர்களில் வினய் சர்மா என்பவன் அனுப்பிய கருணை மனுவை டெல்லி அரசு, துணைநிலை ஆளுநர், உள்துறை அமைச்சகம் ஆகியவை நிராகரித்தன. குடியரசுத் தலைவரும் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இதனையடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவை திரும்பப் பெறுவதாக வினய் சர்மா தெரிவித்தான். இதனிடையே, இத்தனை ஆண்டுகள் ஆகியும் நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்படாதது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட திஹார் சிறையில் பணியாளர் இல்லாததால், பிற சிறைகளில் இருந்து பணியாளரை வரவழைக்க நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூக்குக்கயிறு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற பீகாரின் பக்ஜார் சிறை நிர்வாகத்திடம் 10 கயிறுகள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.