நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 16-ம் தேதி தூக்கு?
Dec 10 2019 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதேநாளில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி, மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், 6 பேரில் 5 பேர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவன், சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டான். 5 பேரில், முக்கிய குற்றவாளியான ராம்சிங், சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
பவன்குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்ஷய் தாகூர் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில், வினய் சர்மா மட்டும் கருணை மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டது. சட்டப்படி கருணைமனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.
இதையடுத்து குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், 4 பேரும் எப்போது வேண்டுமானாலும் தூக்கிலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பாலியல் வன்கொடுமை நடந்த டிசம்பர் 16ம் தேதி, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.