குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு - வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் - நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
Dec 10 2019 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில், இன்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்காவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் கடும் விவாதத்திற்கு பின்னர் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இரவு 11.30 மணிக்குப் பின்னரும் மசோதா குறித்த விவாதம் நீடித்தது. மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கூச்சல் எழுப்பினர். விவாதங்களுக்கு பதிலளித்து, இரவு 11.35 மணிக்கு தனது உரையை உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா நிறைவு செய்தார்.
மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த இரவு சுமார் 11.40 மணிக்கு சபாநாயகர் திரு. ஓம் பிர்லா உத்தரவிட்டார். 311 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், 80 எம்.பி.க்கள் எதிராக வாக்களித்தனர். நள்ளிரவு 12.02 மணிக்கு மசோதா நிறைவேறியது. இதையடுத்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம் நடத்தின.
இதனிடையே, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்தியாவின் முயற்சிக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள அமெரிக்கா, குடியுரிமைக்காக மத சோதனையை மேற்கொண்டால் ஜனநாயகம் சீர்குலைந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.