குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் - வடகிழக்கு மாநிலங்களில் படிப்படியாக திரும்புகிறது இயல்புநிலை
Dec 14 2019 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வந்த அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லி, பீகார், மேற்குவங்கம், கேரளா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவமும், துணை ராணுவமும் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளன.