பிரதமர் மோதி தலைமையிலான ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை - காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
Dec 14 2019 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக திருமதி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தியாவை காப்போம் என வலியுறுத்தி டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங், திரு. ராகுல் காந்தி, திருமதி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்கள் விரோத நடவடிக்கைகளில் பிரதமர் திரு. மோதி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
கூட்டத்தில் பேசிய திருமதி. பிரியங்கா, மத்திய பா.ஜ.க. ஆட்சியில், நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என கடுமையாக விமர்சித்தார். குடியுரிமை சட்டத்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளால், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த, பாரதிய ஜனதா அரசு முயற்சிப்பதாகவும், இதற்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இல்லையென்றால், அரசியலமைப்பு, முற்றிலும் சீரழிக்கப்படும் என்று கூறினார்.
மோதி தலைமையிலான அரசு, நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டதாகவும், அதனை சீர் செய்ய வழி தெரியாமல் மத்திய அமைச்சர்கள் திணறுவதாகவும், சிறு தொழில்கள் அழிந்து வருவதாகவும் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.