பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பற்றி மத்திய அரசை விமர்சித்ததற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டேன் - டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி மீண்டும் திட்டவட்டம்
Dec 14 2019 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவிட்டது உண்மைதான் என்றும் இதுபற்றி பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் திரு. ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய திரு. ராகுல் காந்தி, 'மேக் இன் இந்தியா' குறித்து பிரதமர் திரு. மோதி பேசி வருவதாகவும், ஆனால் நாடு, 'ரேப் இன் இந்தியா' ஆகி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. திரு. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க. பெண் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கடும் கூச்சலிட்டனர். ஆனால், மன்னிப்பு கேட்க ராகுல் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், இந்தியாவை காப்போம் என்ற பெயரில் டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில், பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராகுல் காந்தி, உண்மையை கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று மீண்டும் தெரிவித்துள்ளார். தன் பெயர் ராகுல் காந்தி என்றும், தான் ராகுல் சாவர்கர் அல்ல என்றும், அதனால் மன்னிப்பு கேட்க வாய்ப்பே இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.
காங்கிரசை சேர்ந்த யாரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என்றும், குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டுவந்து வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை தூண்டிவிட்டுள்ள பிரதமர் திரு. மோதியும், திரு. அமித்ஷாவும்தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திரு. ராகுல் காந்தி அப்போது தெரிவித்தார்.