குடியுரிமை சட்டத்திற்கு எதிராகமேற்கு வங்கத்திலும் போராட்டம் - போராட்டத்தை கைவிடும்படி முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்
Dec 15 2019 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் செல்வி. மம்தா பானர்ஜி, பொதுமக்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கடுமையான போராட்டங்கள் நடைபெற்றறு வருகின்றன. இந்நிலையில், இந்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு 24 பர்கானாஸ், மூர்ஷிதாபாத், ஹவுரா கிராம பகுதி உள்ளிட்ட இடங்களில், வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட, சீல்டா மற்றும் ஹஸ்னாபாத் பிரிவுக்கு இடையே ரயில் சேவை முடங்கியதால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான செல்வி. மம்தா பானர்ஜி, தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை, மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என்று உறுதியளிப்பதாகவும், அதனால் தயவு செய்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட வேண்டாம் என்றும், சட்டத்தை யாரும் கையிலெடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.