குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் : வரும் 18-ல் அசாம் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம்
Dec 15 2019 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாம் மாநிலத்தில், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, வரும் 18-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று, அம்மாநில அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், வடகிழக்கு மாநிலங்கள் போர்க்களமாக காட்சி அளிக்கின்றன.
அசாம் மாநிலத்தில், பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, வரும் 18-ம் தேதி அசாம் மாநில அரசு ஊழியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் பசாப் கலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இந்த போராட்டத்தில், மாநிலம் முழுவதும் அனைத்து அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும், 18-ம் தேதி அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் செல்ல மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறும் வரை எதிர்ப்பு தெரிவிப்போம் என்றுக் குறிப்பிட்ட அவர், ஆரம்பத்திலிருந்தே இந்த சட்டத்திற்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும், அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் சார்பில், நாளை முதல் மூன்று நாட்கள் நடைபெறும் போராட்டத்திற்கு, முழு ஆதரவு அளிப்பதாகவும், பசாப் கலிதா கூறினார்.