அயோத்தியில் ராமர் கோவிலுக்கு 1 செங்கல், ரூ.11 நன்கொடை வழங்க வேண்டும் : உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்
Dec 15 2019 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, ஒவ்வொரு குடும்பமும், ஒரு செங்கல் மற்றும் 11 ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, நவம்பர் மாதம் 30-ம் தேதி முதல், வரும் 20-ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மூன்று கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 15 தொகுதிகளுக்கான நான்காம் கட்டத் தேர்தல், நாளை நடைபெற உள்ளது.
இதையொட்டி, கிரிடிஹ் மாவட்டத்தில், பா.ஜ.க., வேட்பாளர்களை ஆதரித்து, பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத், அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்றும், அதன் கட்டுமானப் பணிகளுக்காக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், தலா, ஒரு செங்கல் மற்றும் 11 ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
சமுதாயத்தின் நன்கொடையில் தான், 'ராம ராஜ்யம்' நடைபெற வேண்டும் என்றுக் கூறிய அவர், ராம ராஜ்யத்தில், எவ்வித பாகுபாடின்றி, இளைஞர்கள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் நாட்டின் வளர்ச்சிப் பயன்கள் சென்றடையும் என்றும் முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் கூறினார்.