புல்வாமா தாக்குதலை நினைவூட்டி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த விவகாரம் - உரிய விளக்கம் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
Apr 12 2019 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்காக வாக்களிக்க வேண்டாமா? எனக் கூறி தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடியின் உரை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் லட்டூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு.மோடி, தேர்தலில் முதன்முறையாக ஓட்டு போடும் மக்களுக்கு தான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். தங்களின் முதல் ஓட்டு, பாகிஸ்தானின் பாலகோட்டில் தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டாமா? புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்காக தங்கள் ஓட்டு இருக்க வேண்டாமா? எனப் பேசினார்.
ராணுவ நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இவ்வாறு தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றியது, தேர்தல் விதிமீறல் என எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன. இதனையடுத்து, ராணுவம் பொதுவான அமைப்பு என தெரிவித்த தேர்தல் ஆணையம், அதனை அரசியலுக்குள் இழுக்கக்கூடாது என கூறியது.
எனவே, பிரதமர் மோடியின் உரை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, மஹாராஷ்ட்ர மாநில தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.