தை அமாவாசையையொட்டி, தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில், பொதுமக்கள் இன்று, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சுவாமி கோவில் குளத்தில் தை அமாவாசையையொட்டி பொதுமக்கள் தங்களது மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். திருப்போரூர், மாமல்லபுரம் மற்றும் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தாம்பரம் முடிச்சூர் சாலை அருகே உள்ள குளத்தில் தர்ப்பணம் கொடுத்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் தை அமாவாசையையொட்டி காவிரிக்கரை ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து சாமுண்டி அழைத்தல் மற்றும் கத்திபோடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் 500-க்கும் மேற்பட்ட வீரகுமாரர்கள் மார்பில் கத்தி போட்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதேபோல் நாமக்கல் மாவட்டம் ஓசக் கோட்டை பகுதியில் உள்ள சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கத்தி போடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் கோபாலசமுத்திரம் குளக்கரையில் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு திலா தர்ப்பணம் கொடுத்தனர். இலை படைத்து அரிசி, பருப்பு, வாழைக்காய் , பூசணிக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் படைத்து தங்களின் இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டனார், உள்ளிட்ட இருபத்தோரு தலைமுறை முன்னோர்களுக்கு எள் தர்ப்பணம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றுப்படுகையான பேரணையில் பக்தர்கள் தை அம்மாவாசையை தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். அணைப்பட்டி வீர ஆஞ்சநேயரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் ஏராளமானோர் காத்திருந்து தங்களின் முன்னோர்களுக்கு தார்ப்பணம் கொடுத்தனர். விரதமிருந்த பலர் கோயில்கள் மற்றும் நிநிலைகள் ஆகிய இடங்களில், தங்கள் பித்ருக்களுக்கு திதி கொடுத்து இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள புண்ணிய தலமான சுருளிதீர்த்தத்தில் ஏராளமானோர், அருவியிலும், சுருளி ஆற்றிலும் நீராடி, தம் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு கம்பம், உத்தமபாளையம், போடி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
தை அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணக்குள விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில இருந்து கொண்டு வரப்பட்ட உற்சவ மூர்த்திகள் கலந்து கொண்டன. மேலும் தை அமாவாசையை முன்னிட்டு காந்தி சிலை அருகே கடற்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்ளுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.